தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, வாத்து, காடை , முட்டைகள் அடங்கிய வாகனங்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை மற்றும் கறிக்கோழி விலை சரிந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த 3 நாட்களாக 440 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நேற்று முட்டை விலையில், என்இசிசி மண்டலம் ஒரு முட்டைக்கு 10 காசுகள் விலையை குறைத்துள்ளது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 430 காசுகளுக்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், முட்டை விற்பனை கடுமையாக பாதித்து இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெப்ப அலை காரணமாகவும் கறிக்கோழி, முட்டை மீதான மோகம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து கறிக்கோழியின் விலையும் சரிந்துள்ளது. பல்லடத்தில் நேற்று ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ127 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ 6 வரை குறைந்துள்ளது. கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் பீதியால், கறிக்கோழி விற்பனை மந்தமாக இருப்பதால் விலை குறைக்கப்பட்டுள்ளது.