23 வகை நாய்களுக்கு தடை வாபஸ்..பெற்றோர்களை பீதிக்குள்ளாக்கும் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு சொல்வதென்ன?


      
Published on: 10th May 2024 11:08 AM

23 வகை நாய்களுக்கு தடை வாபஸ்..பெற்றோர்களை பீதிக்குள்ளாக்கும் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு சொல்வதென்ன?

23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்து நேற்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் தாக்கியதால் சிறுமியும் சிறுவனும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் ராட்வீலர் வகை நாயும் சென்னை காவலர் குடியிருப்பில் சைபிரியன் ஹஸ்கி வகை நாய் சிறுவனை கடித்தது.

இதனால் தடை செய்யப்பட்ட இன நாய்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 23 வகையான நாய்களை வளர்க்கவும் இனப்பெருக்கவும் செய்ய தமிழக அரசு தடை விதித்ததோடு நாய் வளர்ப்பு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

 

நாய் தாக்குதல்: இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,"06.05.2024 அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

நாய் இனங்கள்: 12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடைபராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான, பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர். பிலா ப்ரேசிலேரியா. டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

கருத்தடை: மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும். வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.

 

கட்டுப்பாடுகள்: நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்வசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது. செல்லப் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்." என கூறப்பட்டிருந்தது.

உத்தரவு வாபஸ்: இந்நிலையில் வழிகாட்டுதல்கள் தவிர்த்து தடையை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. அதாவது 23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை. மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி தான் தமிழக அரசு இதனை அறிவித்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது. இதன் காரணமாக நேற்று பிறபித்த உத்தரவை திரும்ப பெறப்பட்டதாக கால்நடை பராமரிப்புத் துறை கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்