இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், பத்மவிபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானியுமான எம்.ஆர்.சீனிவாசன் ஊட்டியில் இன்று (மே 20) காலமானார். இவருக்கு வயது 95.
பெங்களூருவில் ஜனவரி 5ம் தேதி 1930ம் ஆண்டு எம்.ஆர்.சீனிவாசன் பிறந்தார். இவர் 1950ம் ஆண்டு இயந்திர பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் 1952ல் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 1954ல் கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் செப்டம்பர் 1955ம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு அணு சக்தி நிலையங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள், அது தொடர்பான கொள்கை உருவாக்குவது என அனைத்திலும் இவரது பங்களிப்பு இருந்துள்ளது.அணுசக்தி வாரிய தலைவர், அணு சக்தி துறை செயலாளர் என பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.ஓய்வுக்கு பிறகு ஊட்டியில் வசித்து வந்த அவர், இன்று (மே 20) காலமானார். அவரது மறைவுக்கு, விஞ்ஞானிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கார்கே இரங்கல்
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், ''பத்மவிபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் துறைக்கு பேரிழப்பு ஆகும். இவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை அணு சக்தி துறையில் வளர்ச்சியை உருவாக்கியது. இவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.