அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் விலை :ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை!!


      
Published on: 10th May 2024 11:01 AM

அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் விலை :ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை!!

சென்னை:அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கம் விலை 2-வது முறை உயர்த்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனிடையே அட்சயதிருதியை காரணமாக தமிழகம் முழுவதும் நகைக்கடைகளை இன்று அதிகாலையிலேயே திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்துள்ளது. எனவே அட்சயதிரிதியையான இன்று நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

 

சவரனுக்கு காலையில் ரூ.360 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் ரூ.360-உயர்த்துள்ளது. இதன் மூலம் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 90 உயர்ந்து ரூ.6,705-க்கும் சவரன் ரூ.53,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கு விற்பனையாகிறது. இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் காஸாவில் நடக்கும் போர் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாலும் சீன மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி உள்ளனர்.சீன மக்கள் மட்டுமின்றி சீன மத்திய வங்கியும் தங்கத்தை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்கிறது.இதுவே உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்