சேதமடைந்த அரசு பேருந்துகள்: உடனடியாக கண்டறிந்து சரி செய்ய போக்குவரத்து துறை உத்தரவு


      
Published on: 27th April 2024 05:35 PM

சேதமடைந்த அரசு பேருந்துகள்: உடனடியாக கண்டறிந்து சரி செய்ய போக்குவரத்து துறை உத்தரவு

செய்தியாளர்: சந்தான குமார்

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பழைய பேருந்துகள் சீரான இடைவெளியில் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் வாங்கப்படுகிறது. இருந்தபோதிலும் சேதமடைந்த பல அரசு பேருந்துகள் தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம், திருச்சியில் நடத்துனர் இருக்கை திடீரென உடைந்த சம்பவம் போன்றவை ‘அரசு பேருந்துகளின் நிலை’ குறித்து பெரும் விமர்சனங்களை எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கும் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் பேருந்துகளில் உள்ள பழுதுகளை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்