பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் காலமானார்!!


      
Published on: 8th May 2024 12:45 PM

பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் காலமானார்!!

பாரதிய ஜன சங்கத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் மூத்த தலைவர் அத்வானியும் இணைந்து 1980ஆம் ஆண்டு பாஜகவாக உருவாக்கினர். தேசிய கட்சியாக பாஜக இருந்தாலும் தமிழகத்தில் அந்த கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. கடந்த 1990களில் தமிழ்நாட்டில் பாஜகவின் சக்தி மிகுந்த தலைவராக வலம் வந்தவர் வேலாயுதம். 

தேசிய கட்சியாக பாஜக தேசிய மிகப்பெரிய அளவில் வளர்ந்தாலும் தமிழகத்தில் காலூன்றாத நிலையில் அந்த கட்சிக்கு என அரசு முத்திரை பதித்த லெட்டர்பேட்டை பெற்று தந்தவர் வேலாயுதம். 1996 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார் வேலாயுதம். அதுதான் தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதி சட்டசபைக்குள் நுழைந்த நிகழ்வாக அமைந்தது. 

தமிழகத்தில் மட்டும் அல்ல தென்னிந்தியாவிலே முதல் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதம். இதனையடுத்து தேசிய அளவில் பேசு பொருளானார் வேலாயுதம். தேசிய தலைவர்களின் கவனமும் அவர் மீது திரும்பியது. அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்றவராக சி. வேலாயுதம் திகழ்ந்தார்.

கன்னியாகுமரி பகுதி மக்களிடம் இவர் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவு கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கால மாற்றம் அரசியலில் இருந்து படிப்படியாக விலகினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வேலாயுதம் இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 74.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளைய தினம் மே 9ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  அவரது மறைவு தமிழக பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வேலாயுதம் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  வேலாயுதம் மறைவு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்